Saturday, April 14, 2012

இயற்கையான கருத்தடை முறைகள்




உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.

முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .

அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது. 

அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல். 
இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.

இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை 
பாவிப்பது கட்டாயமாகும். 



ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம்




எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்த விளக்கம்.

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின் நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.

அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்

உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை 
என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம்.
கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது.

அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.

இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட் 
பயன் படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இது தவீர நோயாளியின் குருதி தவறுதலாக நோய் இல்லாதவருக்கு வழங்கப்பட்டாலும் எயிட்ஸ் தொற்றலாம்.

மேலும் நோயுள்ள ஒரு தாய் ,நோய் இல்லாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.




Thursday, April 12, 2012

குழந்தை பிறந்த பின்பு எப்போது கருத்தடை முறைகள் பாவிக்கப்பட வேண்டும்




குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது பல மாதங்களுக்கு பிற்போவதுடன் கருத்தரிக்கும் சந்தர்ப்பமும் குறைவடைகிறது.இதிலே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவர்கள் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் 
குறைவடைகிறதே தவீர முற்றாக இல்லாமல் போகவில்லை .
ஆகவே ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பிறந்து ஆறு வார காலத்திலேயே ஏதாவது கருத்தடை மாத்திரையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

மாதவிடாய் நிறுத்தமும் உடலுறவும்.




மெனா போஸ் எனப்படும் நிரந்தர மாதவிடாய் நிறுத்தம் பற்றி இந்த இடுகையில் பார்த்தோம். 
ஒரு பெண்ணிலே மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்மைக்குரிய சில ஹார்மோன்களின் அளவும் குறைவடைகின்றது. இதனால் அந்தப்பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதி உலர்வடைந்து உடலுறவின்போது வலியினை ஏற்படுத்தலாம்.

இந்தப் பிரச்சினையைக் கொண்டிருக்கும் பெண்கள் வைத்தியரை நாடி குறிப்பிட்ட ஹாமொன்களை கிரீமாக  
பிறப்புறுப்புப் பகுதியிலே பூசுவதன் மூலம் தீர்வினைப் பெறலாம்.

அத்தோடு அவர்களிலே ஏற்படும் மனக் குழப்பங்கள் காரணமாகவும் உடலுறவில் விருப்பம் குறையலாம்.இவ்வாறான மனக்குழப்பங்களுக்கு உள்ளானவர்களும் வைத்தியரின் உதவியுடன் அதிலிருந்து மீளலாம். 

நிரந்தர மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு ஒரு பெண் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் முற்றாக இல்லாமல் போய் விடுகிறது.




நிரந்தர மாதவிடாய் நிறுத்தம்




பெண்களிலே மாதவிடாய் ஏற்படுவது 48-52 வயதலவிலேயே நிரந்தரமாக நின்று போகும் . இது ஆங்கிலத்திலே மெனாபோஸ்(MENAPOUSE) எனப்படும். 
ஒரு பெண்ணிலே மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்டது என்று கூறுவதற்கு அவளுக்கு தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் 
இருக்க வேண்டும். 
இவ்வாறு மாதவிடாய் நிரந்தரமாக நின்று போவதால் ஒரு பெண்ணின் உடம்பில் உள்ள சில ஹார்மோன்களின் அளவும் குறைந்து போகின்றது.
இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது.
அத்தோடு அவர்களின் என்புகளின் தடிப்புக் குறைந்து அவை பலமற்றதாக மாறக்கூடிய சந்தர்ப்பமும் அதிகரிக்கும். இவ்வாறு என்புகளின்
தடிப்புக் குறைதல் ஒஸ்டியோபோரோசிஸ்(OSTEOPOROSIS) எனப்படும். 
இந்த நிலையினால் பாதிக்கப்பட்ட என்புகள் இலகுவில் முறிந்து விடக்கூடியவை.அதாவது அவர்கள் சாதாரணமாக தடுக்கி விழும் போதே இந்த என்புகள் முறிவடையலாம்.

மேலே சொன்னவை மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு நீண்ட கால அடிப்படையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களாகும்.

இது தவீர மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலப்பகுதியில் பல அறிகுறிகள் ஏற்பட்டு பல அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

அவையாவன ,
  1. ஹாட் பிளாஷ்(HOT FLUSH) எனப்படும் உடம்பு சூடான உணர்வு .
  2. மனக்குழப்பங்கள்
  3. எரிச்சலடையும் தன்மை
  4. தூக்கமின்மை 
  5. பாலியல் உறவில் நாட்டம் குறைதல் போன்றவை .

இவ்வாறான அறிகுறிகள் காரணமாக அதிகரித்த அசௌகரியங்களை அனுபவிப்பவர்கள் வைத்தியரை நாடி உடம்பில் குறைவடைந்த ஹார்மோன்களை பாவிப்பதன் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.